டிஜிட்டல் சினிமா தூரமில்லை
எம்.ஜி.ஆரையும், சிவாஜியையும் கூட நடிக்க வைக்கலாம். அந்த சினிமா வெகுதூரம் இல்லை.
"இயக்குநர்களுக்கு உட்பட்டவன்தான் ஒளிப்பதிவாளன். இயக்குநர்களின் எண்ணங்களை பதிவாக்குவது சுலபமானது அல்ல. ஆயிரம் விஷயங்கள் சரியா தவறா என யோசிக்கும் முன்னே கடந்து போய் விடும்' என்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த். "நளதமயந்தி', "மும்பை எக்ஸ்பிரஸ்', "யாரடி நீ மோகினி' படங்களின் ஒளிப்பதிவாளர்.
வெளிநாட்டு காட்சிகள் மட்டும் ஏன் தெள்ள தெளிவாக இருக்கிறது?
வெளிநாடுகளில் மாசு இல்லை. வாகனப் புகை உள்ளிட்ட சில விஷயங்கள் நம் நாட்டில் அதிகமாக இருக்கிறது. இதுதான் நம் நாட்டில் எடுக்கப்படும் காட்சிகளில் வறட்சியை ஏற்படுத்துகிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜிம்பாவே என பாடல்களை படமாக்க பயணப்படுவது அதற்குதான். மற்றபடி வெளிநாட்டு காட்சிகளுக்கு மட்டும் தனி கேமிராவெல்லாம் கிடையாது.
கிராமத்து படங்கள் செய்யும் ஒளிப்பதிவாளர்கள் குறைந்து விட்டார்களே?
அப்படியெல்லாம் கிடையாது. நான் கூடத்தான் "குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' எஎன்ற முழுமையான கிராமத்து கதையில் பணியாற்றினேன். கிராமத்துக் கதைகளுக்கு இவர்கள்தான் சரி என முத்திரை குத்தி விட்டார்கள். அதனால் சிலருக்கு அந்த வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறது. பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னைதான் என்றாலும், என்னாலும் கிராமத்து கதையில் பயணிக்க முடிந்ததே. இயக்குநர்களின் பார்வைதான் இங்கு சினிமா. அதை நாங்கள் காட்சியாக்குகிறோம் அவ்வளவுதான்.
டிஜிட்டல் சினிமா எப்படியிருக்கும்?
வருங்காலத்தில் சினிமா முழுமையாக மாறப் போகிறது. சினிமாவை எளிமைப்படுத்த கமல்ஹாசனைப் போன்றவர்கள் முயற்சித்து வருகிறார்கள். எளிமைக்கு கேúமிரா முக்கியமானதாக இருக்கும். என்ன லென்ஸ், எப்படி ஆங்கிள் என பல விஷயங்கள் கற்றுக் கொண்டுதான் ஒளிப்பதிவாளராக முடியும் என்பது மாறியிருக்கிறது. டிஜிட்டல் காலத்தில் எம்.ஜி.ஆரையும், சிவாஜியையும் கூட நடிக்க வைக்கலாம். அந்த சினிமா வெகுதூரம் இல்லை.
ஒளிப்பதிவாளர் இயக்குநராவது ஈசியா?
இயக்குநர்களுக்கு உட்பட்டவன்தான் ஒளிப்பதிவாளன். காட்சிகளை, இயக்குநரின் கோணங்களில் படமாக்கும் போது அவன் அங்கு இயக்குநராகிறான். இயக்குநர் என்ன சொல்லப் போகிறார் என்பது ஒளிப்பதிவாளனுக்கு தெரிந்து விடும். அந்த அனுபவம்தான் இங்கு பலரை இயக்குநராக்கி அழகு பார்த்திருக்கிறது. என் பயணமும் வருங்காலங்களில் அந்த எல்லையை தொடலாம்.
சமீபத்திய கவன ஈர்ப்பு?
ஆர்தர் வில்சன், ரவிவர்மன், ராஜேஷ் யாதவ் என பலர் இருக்கிறார்கள். "நான் கடவுள்', "தசாவதாரம்', "பொக்கிஷம்' என சில படைப்புகள் கொஞ்சம் சிலிர்க்க வைத்தது.புது மாதிரியான உலகத்தை திறந்து வைக்கும் இவர்கள் எல்லாம் என் முன்னோடிகள். அவர்களின் உயரம்தான் என் மைல்கல்.