கண்கலங்கிய ரஜினி
ஆப்தரக்சகா இம்மாதம் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. பி.வாசு இயக்கத்தில் மறைந்த கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் நடித்திருந்த இந்தப் படம், இதே கூட்டணி உருவாக்கிய ஆப்தமித்ராவின் இரண்டாம் பாகம். ஆப்தமித்ராவின் தமிழ் ரீமேக் சந்திரமுகி.
இதன் காரணமாக ஆப்தரக்சகாவின் தமிழ் ரீமேக்கிலும் ரஜினி நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. நடிக்க மாட்டார் என்பதே இப்போதைய நிலவரம். 19ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் ஆப்ரக்சகா படத்தை ரஜினி, பிரபு மற்றும் ராம்குமாருடன் பார்த்தார்.
படத்தைப் பார்த்த அவர் தனது நண்பர் விஷ்ணுவர்தனின் நினைவால் கண்கலங்கினார். சந்திரமுகியை தயாரித்த பிரபுவும், ராம்குமாரும் ரஜினியுடன் படம் பார்த்ததால் சந்திரமுகி இரண்டாம் பாகத்துக்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளதாக சிலர் கொளுத்திப் போட்டுள்ளனர். அது வெடிக்குமா என்பது எந்திரனுக்குப் பிறகுதான் தெரியவரும்.