ஆஸ்காருக்கு விஜய் அஸ்குபுஸ்கு
ஜெயம் ராஜா இயக்கத்தில் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் விஜய்.
'ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன்..' இந்த டயலாக்கையெல்லாம் படத்தோடு நிறுத்திக்கொள்கிறார் விஜய்.
ஜெயம் ராஜா இயக்கத்தில் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் விஜய். தற்போது நடித்து வரும்'சுறா'வை முடித்துவிட்டு ஆஸ்காருக்கு தேதி கொடுப்பதுதான் திட்டமாக இருந்தது. திட்டத்தில் திடீரென விளக்கெண்ணெய் ஊற்றியதுபோல நழுவியுள்ளார் நாயகன்.
அதற்கு முன்பாக சித்திக் இயக்கத்தில் மலையாள ரீமேக்கான ‘பாடிகாட்' படத்தில்தான் மேக்கப் போடப்போகிறேன் என ஆஸ்காருக்கு ஆள் அனுப்பிச்சொல்ல அப்செட்டாகிவிட்டாராம் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.
'ப்ரியமானவளே' படத்தை தயாரித்த சிவராஜ் -வெங்கடேஷ் ஆகிய இரட்டையர்கள்தான் பாடிகாட் படத்தை தயாரிக்கின்றனராம். ப்ரியமானவேளே படத்தால் நஷ்ட ஆற்றில் நீண்ட நாட்களாக தவித்துக்கொண்டிருந்தவர்களை கரை சேர்க்கும் எண்ணத்திலேயே அவர்களுக்கு கைக்கொடுத்துள்ளாராம் இளைய தளபதி.