அஜீத்தைத்தான் எனக்கு பிடிக்கும்
கோவா படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பியா, நம்மிடம் மனம் திறந்து பேசுகையில்,
நான் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள இட்டாவா என்ற ஊரில்தான் பிறந்த வளர்ந்தேன். ஒரு நடுத்தர வர்க்க "டிபிகல்' கிராமத்துக் குடும்பம். என்னுடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆசிரியர்கள்.
எங்கள் வீட்டில் எல்லோரும் டீச்சராக இருந்ததாலோ என்னவோ எனக்கு டீச்சர் வேலை பிடிக்கவில்லை. ப்ளஸ் டூ முடித்துவிட்டு வீட்டில் டியூசன் எடுத்துக்கொண்டிருந்தேன். இப்படியே தொடர்ந்தால் என்னையும் டீச்சர் ஆக்கிவிடுவார்கள் என பயந்து, அடுத்தது என்ன செய்யலாம் என யோசிக்கத் தொடங்கினேன். அதையடுத்து என் மனதில் உதித்ததுதான் "மும்பை வேலை' திட்டம். வீட்டில் உள்ளவர்களிடம் மும்பை ஹோட்டல் ஒன்றில் ரிசப்ஷன் வேலை கிடைத்திருப்பதாக பொய் சொன்னேன். வீட்டில் சம்மதிக்கவில்லை. ஆனால் அடம்பிடித்து என் சர்டிஃபிகேட்டோடு மும்பைக்கு வந்துவிட்டேன்.
அதற்கு முன்பு மும்பையைப் பற்றி எதுவும் தெரியாது. இருந்தாலும் மும்பைக்குச் சென்றால் நடிக்கலாம் என்பது என் எண்ணம். நடிப்பு என்றால் வெறும் நடிப்புதான். கதாநாயகி, துணை நடிகை, குணசித்திர நடிகை என்றெல்லாம் இருக்கிறது என்பது கூட எனக்குத் தெரியாது. நான் இறங்கிய இடம் தாதர். அங்குள்ளவர்களிடம் மும்பை எங்கே இருக்கிறது என்று கேட்டேன்.
எல்லோரும் என்னை ஏற இறங்கப் பார்த்தார்கள். இதுதான் மும்பை; மும்பையில்தான் தாதர் பகுதி இருக்கிறது. வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டாயா? என்றெல்லாம் பேசி பயமுறுத்தினர். என்ன ஆனாலும் சரி; ஒரு கை பார்த்துவிடுவது என நினைத்துக்கொண்டேன். என்னிடம் இருந்தது தைரியமும் தன்னம்பிக்கையும் மட்டுமே.
அதன்பிறகு ஒரு "பான்' கடைக்காரர் உதவியுடன் ஒரு நல்ல ஹோட்டலில் ரூம் எடுத்தேன். அடுத்த நாளே சினிமா சம்பந்தப்பட்டவர்களின் முகவரிகள் அடங்கிய புத்தகத்தை வாங்கி வாய்ப்பு தேட ஆரம்பித்தேன். ஒரே வாரத்தில் ஹிந்தி சீரியல் ஒன்றுக்கு டப்பிங் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ச்சியாக 5 சீரியல்களில் டப்பிங் பேசினேன். இப்படியாக டப்பிங் பேசிக்கொண்டே வாய்ப்பு தேடும்போதுதான் எதேச்சையாக ஒரு ஷூட்டிங்கில் இயக்குநர் பிரியதர்ஷனைச் சந்தித்தேன். அவர் என்னுடைய போட்டோக்களை வாங்கி வைத்துக்கொண்டு அழைக்கிறேன் என சொல்லிவிட்டார். சில நாள்கள் கழித்து இயக்குநர் விஜய் வந்தார். பிரியதர்ஷன் தயாரிக்கும் "பொய் சொல்லப் போறோம்' படத்தின் கதையைச் சொல்லி நடிக்கிறீர்களா எனக் கேட்டார். ஆனால் எனக்கு தென்னிந்தியப் படவுலகைப் பற்றி தெரியாததால் முதலில் யோசித்தேன். பிறகு சம்மதித்து நடித்தேன். அந்தப் படத்தில் நல்ல பெயர் கிடைத்தது. அதையடுத்து "ஏகன்', "பலே பாண்டியா', "கோவா' உள்பட மேலும் மூன்று படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இதுதான் நான் நடிகையான கதை.
ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தது. திரையில் என்னைப் பார்த்ததும் அது மறைந்துவிட்டது. சினிமாவுலகைப் பற்றி அவர்களுக்கு விளக்கி பயத்தைப் போக்கிவிட்டேன்.
நம்பர் ஒன் நடிகை ஆக வேண்டும் என்பதில் எல்லாம் எனக்கு ஆர்வம் இல்லை. சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்த எனக்கு இப்போது இருக்கும் நிலைமையே சிறப்பானதுதான். தமிழில் மட்டுமல்ல எந்த மொழியாக இருந்தாலும் நல்ல கேரக்டர்களைத் தேர்ந்தெடுத்து நடித்து "அட... யாரு இந்தப் பொண்ணு?' என்று ரசிகர்களைக் கேட்க வைத்தாலே போதும்.
நடிகர்களில் எனக்கு அஜீத்தைத்தான் பிடிக்கும். ஏனென்றால் நடிகர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற என்னுடைய தவறான எண்ணத்தை மாற்றியவர். "ஏகன்' படத்தின்போது அவர் பழகிய விதமும் எளிமையும் ஆச்சரியப்படுத்தியது. மும்பையில் டி.வி. சீரியல் நடிகர்கள் காட்டிய பந்தாவைப் பார்த்துப்பழகிய எனக்கு இது புது அனுபவமாக இருந்தது.